Monday 29 September, 2008

மன்னிப்பு கேட்கும் மத பீடங்கள்




19 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், பூமியில் உள்ள உயிரனங்களின் தோற்றம் குறித்து, ஐரோப்பாவில் நிலவி வந்த கருத்தென்னவோ விவிலியத்தில் கூறியது போல “இறைவனே ஏழு நாட்களில் உலகத்திலுள்ள அனைத்து உயிரனங்களையும் படைத்தார். ஏழாவது நாளில், மனிதர்களை, அதாவது ஆதாமையும், ஏவாளையும் படைத்தார். அவர்கள் ஈடன் தோட்டத்தில், சாத்தானோட தூண்டுதலால், அறிவுக்கனியை (Fruit of Knowledge) உண்டு உணர்வு பெற்றதன் விளைவே மனித இனம்" என்பன போன்றவையே. அது சரி, அறிவை தரக்கூடிய கனியை உண்ணக் கூடாது என்று ஏன் கடவுள் கூறினார்? அன்றிலிருந்து இன்றுவரை மனிதனை முட்டாளாக வைத்திருப்பதுதான் கடவுளின் வேலை போலிருக்கிறது. இது மாதிரி மதத்திற்கு மதம், அவர்களது கடவுள்தான், அனைத்து உயிரினங்களையும் படைத்தது என்கிறது. இந்து மதம், ஒரு படி மேலே போய், மனிதனுடன் சேர்த்து சாதியையும் படைத்தது.

இந்த சூழலில்தான், 1831ஆம் ஆண்டில் 22 வயது இளைஞனான சார்லஸ் ராபட் டார்வின், ஹச்.எம்.எஸ் பிகல் (HMS Beagle) என்னும் கப்பலில் தனது உலகச்சுற்று பயணத்தை தொடங்கினார். ஐந்து ஆண்டு சுற்றுப்பயணத்தில் உலகத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான உயிரனங்களைப் பற்றியும், அவற்றின் வாழ்நிலை மற்றும் சூழ்நிலையையும் தெரிந்து கொண்டு 1836ல் இங்கிலாந்திற்கு திரும்பினார். பயணத்தின் போது வழிநெடுக, தான் எடுத்த குறிப்புகள் மற்றும் சேகரித்த தாவர, விலங்குகளின் மாதிரிகளின் மீது, அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி செய்தார். அதன் விளைவாக, பரிணாம வளர்ச்சி தத்துவத்தை, ஆர்ஜின் ஆப் ஸிபிஸ் (Origin of Species) என்ற புத்தகத்தின் மூலம் 1859ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்த புத்தகம் ஐரோப்பாவில் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியது.

உலகத்தில் முதன் முதலில் தோன்றியது ஒரு செல் உயிரினம்தான், பின்பு இரு செல் உயிரி, அதன் தொடர்ச்சியாக நீரில் வாழ்வன, நீரிலும் நிலத்திலும் வாழ்பவை, நிலத்தில் வாழ்பவை என்று கோடிக்கணக்கான ஆண்டுகள் நிகழ்ந்த பரிணாம வளர்ச்சியின் விளைவே பல்வேறு உயிரினங்கள் என்பதே இந்த புத்தகத்தின் சாராம்சம். எந்த ஒரு உயிரினம், தன் புறச்சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்கிறதோ (Theory of Natural selection & survival of fittest), அது மட்டுமே தப்பி பிழைக்கும் என்றார். அதோடு, மனிதனும் (Homo sapiens) விலங்கினதை சேர்ந்தவன்தான், அவனுடைய முன்னோர்கள் குரங்குகள் என்றும் கூறினார். மனிதனை இறைவனே படைத்தான், அவனுரும் அல்லல்களுக்கு ஆதாம் ஏவாள் செய்த பாவமே காரணம் என்று மத பீடங்கள் போதித்த கருத்தை தகர்த்தது டார்வின் தத்துவம். இதனால் ஆத்திரம் அடைந்த கிறுத்துவ மத பீடம், பரிணாம வளர்ச்சி தத்துவத்தை தவறு என்றது. பள்ளிகளில், விவிலியத்தில் கூறியுள்ள உருவாக்குதல் தத்துவத்தையே (Creationism theory) போதிக்குமாறு வலியுறுத்தியது. உழைக்கும் மக்கள் தனது வறுமைக்கு காரணமாக விதியையும், முன்னோர்கள் செய்த பாவம் அல்லது தான் முற்பிறவியில் செய்த பாவம் என்று நம்புவதையே ஆளும்வர்க்கம் விரும்பியது. ஏனென்றால் இது, ஆளும் வர்க்கத்தின் சுரண்டல்களை மறைப்பதற்க்கும், உழைக்கும் வர்க்கம் ஒடுக்குமுறையை எதிர்த்து கிழர்ந்தெழுவதை தடுப்பதற்கும் உதவியது. மதம் இதை கச்சிதமாக பாது்காத்து வந்தது.

சமூகத்தில் முரண்பாடுகள் இடையறாது மோதிக்கொண்டே இருக்கும், அதன் விளைவாக மாற்றம், வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்படுகிறது என்ற வரலாற்று பொருள் முதல்வாதத்தை உருவாக்கிய மார்க்ஸ், டார்வின் தத்துவத்தை பார்த்து புலகாங்கிதம் அடைந்ததில் ஆச்சரியம் ஒன்றுமிலை. தனது, மூலதனத்தின் இரண்டாம் பதிப்பை அவருக்கு அனுப்பி வைத்தார்.

டார்வின் அமீபாவில் இருந்துதான் மனிதன் வந்தான் என்று சொன்னதுமே, சர்ச்சு அறிவுஜீவிகள் அந்த அமீபாவை படைச்சது யாருனு? கேட்டாங்க. அவர்கள் வாதமெல்லாம், ஒரு பொருளோ அல்லது உயிரினமோ இருக்கிறது என்றால் கண்டிப்பாக அது ஒருவரால் படைக்க பெற்றிருக்க வேண்டும் என்பதே. அப்ப கடவுள் இருக்கிறார்னு சொல்ற இவங்க, அத படைச்சது யாருனு? கேட்டா, "அவர் சுயம்பு, அதாவது தானாகவே தோன்றினார்"ங்றாங்க. அவரால் முடியும்னா, ஏன் இந்த அமீபா தானாக தோன்ற முடியாது.

காலப்போக்கில் டார்வினின் பரிணாம வளர்ச்சி தத்துமானது தவிர்க்க முடியாத அறிவியல் உண்மையாகிவிட்ட நிலையில், இன்று அனைத்து பள்ளிகளிலும் (கிறுத்துவ மத பள்ளிகள் உட்பட) அறிவியல் வகுப்பில் போதிக்கப்படுகிறது. ஆனால் இன்னொருபுறம், மத வகுப்புக்களில் இறைவனே மனிதர்களை படைத்தான் என்பதும் தொடர்கிறது.


கடந்த செப் 14 2008, பரிணாம வளர்ச்சி தத்துவம் வெளியாகி 149 ஆண்டுகள் கழித்து, இங்கிலாந்திலுள்ள கிறுத்துவ மத தலைமையகம் (Church of England) டார்வினிடம் மன்னிப்பு கோரியுள்ளது. அந்த அமைப்பின், தலைமை மக்கள் தொடர்பாளர் ரெவ். டாக்டர் மால்கம் பிரவுன் வெளியிட்டுள்ள அறிகையில், “டார்வினின் தத்துவத்தை கண்மூடித்தனமாக எதிர்ததற்காகவும், பிறரையும் அவ்வாறு செய்ய தூண்டியதற்காகவும் நாங்கள் அவரிடம் மன்னிப்பு கேட்கிறோம். கிறுத்துவ மதப்பீடங்கள், வானவியல் அறிஞர் கலீலியோவிற்கு இழைத்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. டார்வினின் பிறந்து இருநூற்றாண்டு நிறைவடையும் இவ்வேளையிலே, மத பீடம் அவருடைய தத்துவத்தை புரிந்துக்கொள்ளாதற்கு மன்னிப்பு கேட்கிறது”.
எந்த ஒரு உயிரினம், தன் புறசூழ்நிலைக்களுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்கிறதோ (Theory of Natural selection & survival of fittest), அது மட்டுமே தப்பி பிழைக்கும் என்ற டார்வினின் தத்துவம், பாவமன்னிப்பு கேட்கும் இந்த மதப்பீடங்களுக்கும் பொருந்தும். அடிப்படைவாத கிறுத்துவ அமைப்புகளிடமிருந்து விலகி, தன்னை ஒரு நவீன அறிவியல் சார்ந்த மதமாக காட்டிக்கொண்டால் மட்டுமே தப்பி பிழைக்க முடியுமென்பதே இதற்கு காரணம்.

உலக மக்கள் அனைவரின் குடியுரிமைக்காக போராடிய, ஆனால் எந்த நாட்டிலும் குடியுரிமை வழங்காமல் விரட்ட பட்ட , இன்னோர் மாமேதையிடம் இந்த உலகமே மன்னிப்பு கேட்கும் நாள் வெகு விரைவில் வரும்.

வானவியல் அறிஞர் கலீலியோவிற்கு, மத பீடங்கள் இழைத்த கொடுமைகளை பற்றி அடுத்த இடுகையில் பார்போம்.

(மேலே உள்ளது டார்வினின் புகைப்படம்)

5 comments:

ஜெயக்குமார் said...

பெயரில்லா நண்பரே, உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. நீங்கள் தாராளமாக அனைவருக்கும் நமது இடுகையைப்பற்றி தெரிவிக்கலாம். நமது நோக்கமே அனைவருக்கும் மூன்றாம் பார்வையை உருவாக்குவதுதான்...

Anonymous said...

i am waiting for your next topic.........
dravidan

ஜெயக்குமார் said...

திராவிடரே, உமது எதிர்பார்புக்கு மிக்க நன்றி.
எமது அடுத்த இடுகையை விரைவில் எதிர் பாருங்கள்.

பாலமுருகன் said...

தலைவா அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்க

ஜெயக்குமார் said...

திரு.பாலமுருகன் அவர்களே! பல அலுவல் காரணமாக அடுத்த இடுகை தாமதமாகி விட்டது. விரைவில் எதிர்பாருங்கள்

Post a Comment